ஐசிசியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி, இதன் 13ஆவது தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கிம்பேர்லி நகரில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது.
இந்தத் தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வி அடைந்ததால் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நைஜீரியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தவறான முடிவை தேர்வுசெய்துவிட்டோம் என்பது அந்த அணிக்கு அப்போது தெரியாமல் போனது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தன்வீர் சங்காவுடன் ஆஸி. வீரர்கள் ஏனெனில், முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்காட்டாக சரிந்தது. தொடக்க வீரர் எலிஜா ஒலாலேயேவை தவிர அணியிலிருந்த ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களிலும் ஏனைய நான்கு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம், ஆஸ்திரேலிய அணி 14 ரன்களை உதிரிகளாக வழங்க, நைஜீரியா அணி 30.3 ஓவர்களில் 61 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எலிஜா ஒலாலேயே 21 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் தன்வீர் சங்கா 14 ரன்கள் மட்டுமே வழங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான சாம் ஃபன்னிங் 30 ரன்களுடனும், ஜேக் ஃபிரசர் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 7.4 ஓவர்களிலேயை 62 ரன்களை எடுத்து இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி குரூப் பி பிரிவில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் சூதாட்டம் -11 பேர் கைது!