தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 17, 2020, 10:57 AM IST

ETV Bharat / sports

எல்பிஎல் டி20: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்!

இலங்கையில் நடைபெற்றுவந்த முதல் சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.

Jaffna Stallions win inaugural Lanka Premier League with thumping final win over Galle Gladiators
Jaffna Stallions win inaugural Lanka Premier League with thumping final win over Galle Gladiators

இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் தொடங்கியது. நவம்பர் 21ஆம் தேதிமுதல் நடைபெற்றுவந்த இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து, நேற்று (டிச. 16) இறுதிப் போட்டி நடைபெற்றது.

இத்தொடரின் இறுதிப் போட்டியில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி, பானுக ராஜபக்ச தலைமையிலான கலே கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

தொடக்கம் முதலே அதிரடி

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ - சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதன்மூலம் ஆறு ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது.

அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சார்லஸும் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய அசலங்கா 10 ரன்களில் சண்டகனிடம் விக்கெட்டை இழந்தார்.

அதிரடியில் மிரட்டிய சோயிப் மாலிக்

பின்னர் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் - டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மாலிக் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 46 ரன்களையும், திசாரா பெரேரா 39 ரன்களையும் எடுத்தனர்.

தொடக்கத்திலேயே சறுக்கிய கிளாடியேட்டர்ஸ்

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான தனுஷ்கா குணத்திலகா, ஹஸ்ரதுல்லா ஸஸாய், அஷன் அலி ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி ஆறு ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

நம்பிக்கையளித்த ராஜபக்ச

அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் பானுக ராஜபக்ச அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்ஸாம் கானும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி உதவினார்.

இருப்பினும் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜபக்ச ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து 36 ரன்களில் அசாம் கானும் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டாலியன்ஸ்

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கிளாடியேட்டர்ஸ் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

மேலும் தொடக்க சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் கோப்பையையும் வென்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த சோயிப் மாலிக் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ராய் கிருஷ்ணா அதிரடியால் வெற்றி பெற்ற ஏடிகே மோகன் பாகன்!

ABOUT THE AUTHOR

...view details