ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான மக்களும், காடுகளும், விலங்குகளும் பாதிப்பைச் சந்தித்தன. இவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகின் பல்வேறு பகுதியினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதற்கான நிதியை வழங்க முடிவுசெய்யப்பட்டது. இதனால் பாண்டிங் தலைமையில் ஒரு அணியும், கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் உருவாக்கப்பட்டது. இதன் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டி நாளை நடக்கவுள்ளது.
இந்தப் புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கவுள்ளதால், பாண்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்படும் சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''இது ஒரு எச்சரிக்கையான நேரம். நம் மனிதம் மீதான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயை பேரழிவு என்று சொல்வதே குறைந்த வார்த்தை. இதில் ஏராளமான மனித உயிர்களுடன், காடுகளும் விலங்குகளும் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதுகுறித்து யாரும் பேசாமல் இருக்கிறோம். நமது வாழ்வில் காடும் விலங்குகளும் மிகவும் முக்கியம்.
அதனால் நான் இந்தப் போட்டிக்கு என்னால் இயன்றதை செய்கிறேன். நிதி திரட்டுவதற்கு என்ன வழியெல்லாம் இருக்கிறதோ, அந்த வழிகளில் எல்லாம் உதவியை செய்து வருகிறேன்.
1991ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வந்ததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நான்கு மாதங்கள் இங்கே வாழ்ந்தேன். நான் இந்தியா திரும்பி சென்றபோது, ஆஸ்திரேலிய மொழி என்னை விட்டு நீங்காமல் இருந்தது. அந்த நேரம் எனது கிரிக்கெட் மிகவும் மேம்பட்டது.
ஆஸ்திரேலியர்கள் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். போட்டி என்று வந்தால் அப்படிதான் இருக்கவேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயம் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யாரை தேர்வு செய்வீர்கள்?