தமிழ்நாடு

tamil nadu

அதிரடி காட்டிய ரோஹித்: நியூசி.க்கு 164 ரன்கள் இலக்கு!

By

Published : Feb 2, 2020, 3:02 PM IST

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 163 ரன்களை எடுத்துள்ளது.

india-set-a-target-of-164-for-nz
india-set-a-target-of-164-for-nz

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் கேப்டனாகச் செயல்படுகிறார்.

பின்னர் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - கே.எல். ராகுல் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ராகுல் - ரோஹித் இணை ஜோடி சேர்ந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியால், இந்திய அணி பவர் - ப்ளே ஓவர்கள் முடிவில் 53 ரன்களை எடுத்தது.

சஞ்சு சாம்சன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசி.,

தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி இந்திய அணி ரன்கள் சேர்த்துவந்தது. ஒன்பது ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 10ஆவது ஓவரில் டாப் கியருக்கு மாறியது. அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்க 10 ஓவர் முடிவில் 84 ரன்களை எட்டியது.

பின்னர் அதிரடிக்கு மாறிய இந்தக் கூட்டணி நியூசி. பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுல் பென்னட் பந்தில் அடித்த ஷாட் எட்ஜாகி சாண்ட்னரிடம் கேட்சானது. இதனால் ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ராகுல்

பின்னர் இணைந்த ரோஹித் - ஸ்ரேயாஸ் கூட்டணி சிறிது நேரம் நிதானமாக ஆட, 15ஆவது ஓவரின்போது அதிரடிக்கு மாறியது. பின்னர் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இந்தக் கூட்டணியின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 16 ஓவர்களில் 131 ரன்களை எட்டியது. அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட உடல் பிரச்னையால் ரிடையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். இதனால் சிவம் தூபே களமிறங்கினார்.

60 ரன்கள் அடித்த ரோஹித்

18ஆவது ஓவரில் இந்திய அணி மூன்று ரன்களை மட்டும் எடுக்க, 19ஆவது ஓவரில் சிவம் தூபே விக்கெட்டை பறிக்கொடுத்ததோடு ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் மனீஷ் பாண்டேவின் ஆட்டத்தால் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 31 பந்துகளில் 33 ரன்களும், மனீஷ் பாண்டே நான்கு பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சுருண்ட இந்திய மகளிர் அணி!

ABOUT THE AUTHOR

...view details