சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச்.18) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்-வீரேந்திர சேவாக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய வீரேந்திர சேவாக், 17 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், அரைசதம் கடந்தார். பின்னர் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சினும் ஆட்டமிழந்த பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த யூசுப் பதான் - யுவராஜ் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
அதிலும் யுவராஜ் சிங், ஒரே ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களைப் பறக்கவிட்டு பந்துவீச்சாளரை நிலைகுலையச் செய்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் என 49 ரன்களையும், யூசுப் பதான் 37 ரன்களையும் குவித்திருந்தனர்.