தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: வெற்றியைத் தக்கவைக்குமா இந்தியா? - Ishanth Sharma

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப்.24) தொடங்குகிறது.

IND vs ENG, 3rd Test: Floodlights at Motera Stadium programmed to help sighting in twilight period
IND vs ENG, 3rd Test: Floodlights at Motera Stadium programmed to help sighting in twilight period

By

Published : Feb 23, 2021, 9:16 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், மற்றொன்றில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.24) நடைபெறவுள்ளது. மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை விளையாடியுள்ள இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றிருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

மேலும், இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த சர்வதேச கோப்பைகளையும் வென்றதில்லை. அதை பூர்த்தி செய்வதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு நல்ல வாய்ப்பு. அதன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு உள்ள கடைசி வாய்ப்பும் இந்த டெஸ்ட் தொடர்தான். ஏனெனில் இங்கிலாந்து தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட முடியும்.

அதேசமயம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இதுவரை நடந்திருக்கும் 15 பகலிரவு போட்டிகளில் ஒன்றுகூட டிரா ஆனதில்லை. அனைத்தும் முடிவைக் கொடுத்திருக்கின்றன. அதனால், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும் என்பது எழுதப்படாத உண்மை.

அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொடரை வென்றாலே போதும். அதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை, இந்தியா இப்போட்டியில் தோற்று விட்டால், அதிகபட்சம் இந்தத் தொடரை டிரா செய்யவே முடியும். அதனால், இந்திய அணிக்கு வெற்றி மிகவும் அவசியம்.

இந்திய அணி

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற நம்பிக்கையோடு களமிறங்கும் இந்திய அணியில், இப்போது உமேஷ் யாதவும் இணைந்திருக்கிறார். அதனால், அணி இன்னும் பலமடையும். காயத்தால் முதலிரண்டு போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படாத உமேஷ், இப்போது ஷர்துல் தாக்கூருக்குப் பதில் அணியில் இணைந்திருக்கிறார்.

மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஓய்வளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ராவும் இப்போட்டியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவுக்கு இது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். இதனால் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி இப்போட்டியில் விளையாடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கடந்த முறை வங்கதேச அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் இஷாந்தின் வேகம் இந்திய அணிக்கு பெரும் பலனை வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரஹானே, சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருடன் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இந்திய அணி இப்போட்டியை வெல்வதற்கு தேவையான பலத்துடன் இருப்பது போலவே தெரிகிறது.

இங்கிலாந்து அணி

அதேசமயம் இங்கிலாந்து அணியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ரன் மெஷின் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் தற்போது கூடுதல் வரவாக அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் அணியில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற இரு வேகப்புயல்களும் இப்போட்டியில் நிச்சயம் இடம்பெறுவார்கள். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவைத் தரும் செய்திதான்.

பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ரூட், ஜேக் லீச், பென் ஃபோக்ஸ், ஸ்டோக்ஸ் என வலிமையான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் பதிலடி கொடுப்பார்களா என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி. இதற்கான பதிலும் இப்போட்டியின் முடிவில் தான் தெரியவரும்.

மொடீரா மைதானம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள மொடீரா மைதானத்தில் 1983ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. 2006ஆம் ஆண்டு சீரமைப்பு பணிகளுக்காக மைதானம் மூடப்பட்டு பின்னர் 2007ஆம் ஆண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து 2015ஆம் ஆண்டு மொத்த சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்வதற்காக மைதானம் முழுவதுமாக மூடப்பட்டது. சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 10ஆயிரம் பேர் அமரும் வகையில் மிக பிரமாண்ட மைதானமாக உருவெடுத்த மொடீராவில், கடந்த ஆண்டு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் இந்தாண்டு சயீத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடத்தப்பட்டது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் 12 டெஸ்ட் போட்டிகளும், 23 ஒருநாள் போட்டிகளும், 1 டி20 போட்டியும் நடைபெற்றுள்ளன. ஆனால், மைதானத்தின் மறுசீரமைப்பிற்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து முதல் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா :விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த் , விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஸாக் கிரௌலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒல்லி போப், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details