தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2021, 8:49 PM IST

ETV Bharat / sports

Ind vs Eng, 1st T20I: ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டத்தால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Ind vs Eng, 1st T20I: Shreyas Half century helps India; England need 125 runs to win
Ind vs Eng, 1st T20I: Shreyas Half century helps India; England need 125 runs to win

அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 12) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்ததன் மூலம் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் களமிறங்கினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சிக் காத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றியும், ஷிகர் தவான் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ரன்களுக்குள் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின், ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்து பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டிய ஒருபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளை விளாசி ரன் கணக்கை உயர்த்திவந்தார்.

இதில், ஸ்ரேயாஸ் ஐயர், 36 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது மூன்றாவது அரைசதத்தைக் கடந்தார். மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்த ஹர்திக் பாண்டியா 19 ரன்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அடுத்த பந்திலேயே சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையும் படிங்க: கத்தார் ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய ஃபெடரர்!

ABOUT THE AUTHOR

...view details