இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் சேர்க்கப்பட்டார். மறுமுனையில், இந்திய அணி எந்த வித மாற்றமும் செய்யாமல் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களுடனே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர், இந்தியப் பந்துவீச்சாளர் ஷமியின் பந்துவீச்சில் மூன்று ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன் பின் சிங்கிள் எடுக்க ஸ்டீவ் ஸ்மித்துடன் களத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் அவுட்டானார். இதனால், ஆஸ்திரேலிய அணி 8.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுசானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே நேர்த்தியான ஷாட்டுகளை விளையாடிய லபுசானே ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இந்த ஜோடி 127 ரன்களை சேர்த்த நிலையில், லபுசானே ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.