உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 46.1 ஓவர்களில் 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எஞ்சியிருக்கும் ஓவர்களுக்கு பேட்டிங்கை தொடர்ந்தது நியூசிலாந்து அணி. அப்போது சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லர் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கால் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே லாதம் 10 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஹென்றி 1 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரை போல்ட் - சாண்ட்னர் இணை எதிர்கொண்டது. அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட வந்த இந்திய அணி ஆரம்பமே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகுந்த ஏமாற்றமளித்தது. அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறியதால் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் சிக்கி கொண்டது.
இளம் வீரர்கள் பண்ட்டும், பாண்ட்யாவும் தலா 32 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தனர். இருப்பினும் அவர்களும் நீண்ட நேரம் களத்தில் சோபிக்கவில்லை. இக்கட்டான நிலையில் தோனியும், ஜடேஜாவும் களமிறங்கினர். அதிர்ச்சியில் துவண்டு கிடந்த இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ரவீந்திர ஜடேஜா ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.