தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 11:39 AM IST

ETV Bharat / sports

முதல் பந்தில் இருந்து வெற்றிப் பயணத்தை தொடங்குவோம் - இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பரீத் கவுர் அறிவரை வழங்கியுள்ளார்.

ICC Women's T20 World Cup: Harmanpreet Kaur has this message for her teammates ahead of final
ICC Women's T20 World Cup: Harmanpreet Kaur has this message for her teammates ahead of final

மெல்போர்னில் இன்னும் சில மணிநேரங்களில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதுவரை நான்கு முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி இன்று ஐந்தாவது முறை கோப்பை வெல்லுமா அல்லது இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி

இப்போட்டியில் பங்கேற்கும் இவ்விரு அணிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

அதில் அவர் பேசியதாவது,"மழைக்காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற வேண்டிய அரையிறுதி போட்டியில் நாம் விளையாடவில்லை. உள்ளரங்கில் நாம் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டாலும், அது நமக்கு போதுமான நம்பிக்கையை தராது. ஏனெனில், உள்ளரங்கில் விளையாடுவதிலும், வெளியில் களத்தில் விளையாடுவதிலும் வித்தியாசம் உள்ளது.

இறுதி போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு எட்டு நாள்கள் ஓய்வு கிடைத்தது. ஆனால், யாரும் ஓய்வெடுக்க விரும்பவில்லை. எல்லோரும் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றனர். போட்டியின்போது (இன்று) என்ன நடக்கும், எது நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை யோசித்தபதை விட அந்த தருணத்தை ரசித்து நமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டும்தான் நாம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற வேண்டிய அரையிறுதி போட்டி மழையால் ரத்தானதால், புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டிக்காக இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது.

இந்திய மகளிர் அணி

2017இல் லார்ட்ஸில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் போராடி தோல்வியடைந்தது. அதன்பின் தற்போதுதான் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை ஒருமுறைகூட உலகக்கோப்பையை வெல்லாமல் இருக்கும் இந்திய அணி, சர்வதேச மகளிர் தினமான இன்று, அந்த சரித்திரத்தை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.

இதையும் படிங்க:மகளிர் டி20 இறுதிப் போட்டிகளும் ஆஸி.யின் ஆதிக்கமும்...!

ABOUT THE AUTHOR

...view details