தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2019, 7:32 PM IST

ETV Bharat / sports

டெல்லியில் காற்று மாசு: இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டி20 மாற்றமா?

டெல்லியில் காற்று மாசு இருந்தாலும் இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

delhi arun jaitley

வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக வங்கதேச நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அந்நாட்டு அணியின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்தியாவுக்கு எதிரான தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால் இந்தத் தொடர் நடைபெறும் என்ற நம்பிக்கை எழுந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி டி20 தொடரின் முதல் போட்டியை நடத்துவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசுதான் இந்தப் புதிய சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக டெல்லியில் காற்று மாசு என்பது அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தச் சூழலில் தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் டெல்லியில் காற்று மாசுபாடு 999 டிகிரி என்ற அபாய நிலையை அடைந்திருப்பதாக அம்மாநிலம் வெளியிட்ட காற்று தர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி மாநில காற்றின் தரவுகளின் அடிப்படையில் 401 முதல் 500 வரையிலான வெப்பநிலை கடுமையானது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் மேலான வெப்பநிலை நிலவுவதால் வரும் வாரங்களில் இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதில் சிக்கல் நீடித்துவருகிறது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, டெல்லியில் காற்று மாசு குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அது இரண்டு நாளில் சீரடையும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். எனவே முதல் போட்டி நடைபெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை, அது திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details