கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 3 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது, அந்த அணியின் ஃபால்க்னர் தனது ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசியதும் தான் ஒரு குழந்தையைப்போல் அழுததாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய இஷாந்த், 'கடந்த 2013ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜேம்ஸ் ஃபால்க்னர், எனது ஒரே ஓவரில் 30 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். அப்போது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது நான் எனக்கும், எனது நாட்டிற்கும் துரோகம் இழைத்ததாக உணர்ந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் நான் யாரிடமும் பேசவில்லை.