தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4ஆவது முறையாக சிபிஎல் கோப்பையை வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்!

கைரன் பொல்லார்டு துள்ளிய பவுலிங் மற்றும் லென்டன் சிம்மன்ஸ் அதிரடி பேட்டிங்கால் செயிண்ட் லூசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா ஐபிஎஸ் அணி உரிமையாளர்களின் மற்றொரு அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

By

Published : Sep 11, 2020, 3:05 PM IST

CPL 2020
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியினர்

டரெளபா: கரீபியன் பிரீமியர் லீக் 2020 தொடரின் சாம்பியனாக ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக்-கின் 8ஆவது சீசன் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இந்தப் போட்டி இந்த ஆண்டு கரோனா பீதி காரணமாக ரசிகர்கள் இல்லாமல் கதவுகள் மூடப்பட்ட நிலையில் போட்டிகள் அனைத்தும் நடைபெற்றம்.

இந்த சீசினில் ஆறு அணிகள் பங்கேற்ற நிலையில், கைரன் பொல்லார்டின் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் டேரன் சம்மி தலைமையிலான செயிண்ட் லூசியா ஸீக்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மற்றொரு அணிதான் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

சிபிஎல் கோப்பையை வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி

டரெளபாவிலுள்ள பிரெயின் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துல்லியமான பந்து வீச்சினால் செயிண்ட் லூசியா அணி பெரிய அளிவில் ஸ்கோர் எடுக்க முடியாமல் தடுமாறியது .

இறுதியில் செயிண்ட் லூசியா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பிளெட்சர் 39 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய ட்ரின்பாகோ அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும், தொடக்க ஆட்டக்காரர் சிம்மண்ஸ் - டேரன் பிராவோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி ட்ரின்பாகோ அணி நான்காவது முறையாக சிபிஎல் கோப்பையை வென்றது. சிறப்பாக விளையாடிய சிம்மண்ஸ் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து 84 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் டேரன் பிராவோ 2 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

சிறப்பான பேட்டிங் மூலம் தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்த லெண்டன் சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் முத்திரை பதித்த கைரன் பொல்லார்டு தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல் சிபிஎல் தொடருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இந்த ஆண்டில் முதல் முறையாக ரசிகர்கள் இன்றி அனைத்து போட்டிகளும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கவுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் உள்ளூர் போட்டிகளில் யுவராஜ்? பிசிசிஐ விதிகள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details