தமிழ்நாடு

tamil nadu

மகளிர் கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி!

IND Vs AUS 2nd ODI: இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By PTI

Published : Dec 30, 2023, 11:05 PM IST

Published : Dec 30, 2023, 11:05 PM IST

Updated : Dec 31, 2023, 6:14 AM IST

IND Vs AUS 2nd ODI
3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், இன்று (டிச.30) 2வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸ்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி இந்திய அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யாஸ்திகா பாட்டியா - ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், 2 பவுண்டரிகளை விளாசி 37 ரன்களில் 6.6வது ஓவரில், யாஸ்திகா பாட்டியா எல்பிடபிள்யூவால் ஆட்டமிழந்தார்.

பின்னர், இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் களமிறங்கி, தனது திறமையை வெளிப்படுத்தினார். ஸ்மிருதி மந்தனா - ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பாக விளையாடி, அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர் முடிவில் இந்திய அணி 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

அதன்பின், ஸ்மிருதி மந்தனா 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் வீதம் 38 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் ரிச்சா கோஷ் இருந்தார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், 55 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து, 33.1வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்தார்.

அதன்பின், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்க, 10 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் சென்றார். அதனைத் தொடர்ந்து தீப்தி சர்மா களமிறங்கினார். இந்நிலையில், தொடர்ந்து களத்தில் இருந்த ரிச்சா கோஷ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 43.5வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்தார். ரிச்சா கோஷ் 117 பந்துகளில் 13 பவுண்டரிகள் வீளாசி 96 ரன்கள் எடுத்திருந்தார்.

அமன்ஜோத் கவுர் களம் இறங்கி, 5 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்படி இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளில் 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று வாகை சூடியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அனாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளும், ஜார்ஜியா வேர்ஹாம் 2 விக்கெட்டுகளும், கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்திய அணி:ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங்.

ஆஸ்திரேலிய அணி: அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், டார்சி பிரவுன்.

இதையும் படிங்க:வில்வித்தையில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஷீத்தல் தேவி.. எதற்காக தெரியுமா?

Last Updated : Dec 31, 2023, 6:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details