தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2019, 5:45 AM IST

ETV Bharat / sports

பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்

பசெல்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள லின் டானை வீழ்த்தி இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

prannoy

சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே அசத்திய இந்திய வீரர்கள் அசத்தலாக இரண்டாவது சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், ஐந்து முறை உலக சாம்பியன் பெற்றவரான சீனாவின் லின் டானை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டியேலயே 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரனாய் லின் டானிற்கு அதிர்ச்சியளித்தார். பின்னர், இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட முன்னாள் உலக சாம்பியன் 21-13 என இந்திய வீரரை வீழ்த்தினார். இறுதி செட்டை 21-7 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய பிரனாய், லின் டானை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் முன்னாள் உலக சாம்பியன் லின் டான் பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம்

பிரனாய் இதுபோன்று லின் டானை வீழ்த்துவது புதிதல்ல. முன்னதாக 2015 பிரஞ்சு ஓபன், 2018ஆம் ஆண்டு இந்தோனிசியன் ஓபன் ஆகிய தொடரிலும் பிரனாய் லின் டானை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் பிரனாய் அடுத்து நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமாட்டாவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் கொரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

...view details