கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனையடுத்து இன்று முதல் (நவம்பர் 10) திரையரங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது.
ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் வெளிவராத நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றது. இந்த பேச்சுவார்த்தை தற்போது தோல்வியடைந்தது. இதனால் தீபாவளிக்கு புதியப் படங்கள் வெளியாகாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தற்போது நவம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணங்கள் தேவையில்லை என க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து புதியத் திரைப்படங்கள் இந்த மாதம் வெளியிட சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஆனால் இந்த முடிவு தற்காலிகமானது என்றும் பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்கத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்தநிலையில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPFஐ தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது.
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPFஐ விலக்கி இருந்தாலும் அது 2 வராங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும்பட்சத்தில் இதை எங்கள் சிறுவெற்றியாகவும் கருதி VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதே சமயம் VPF-ஐ கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.