இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், " அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியத்தை பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல். ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன.
மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக 16 ஆயிரம் மட்டுமே வந்திருக்கும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணமாக செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என தெரியவில்லை.
அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால், அதற்கான திறன் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்” என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தங்கர் பச்சான் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைப்பட இயக்குநர் திரு. தங்கர்பச்சான் அவர்கள் மின் கட்டணம் சம்பந்தமாக சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அவரது இல்லத்திற்கு #TANGEDCO அதிகாரிகள் நேரில் சென்று அவர்களுடைய மின் பயன்பாடு அளவை பற்றி விளக்கமித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
மின் பயன்பாடு அளவைப் பற்றி புகாரளிக்கவில்லை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் பெறும் முறையைதான் மாற்றும்படி கோரிக்கை விடுத்ததாக தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையை திமுக அரசு கொண்டுவருகிறதா என தெரியவில்லை.
இதையும் படிங்க:சமையல் கற்றுக்கொள்ளும் ஹரிஷ் கல்யாண்