தமிழ்நாடு

tamil nadu

பாடும் வானம்பாடி மறைந்தது - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

சென்னை: இந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம்வந்த எஸ்.பி.பி. மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By

Published : Sep 25, 2020, 6:20 PM IST

Published : Sep 25, 2020, 6:20 PM IST

Updated : Sep 25, 2020, 7:19 PM IST

spb
spb

நகைச்சுவை, பேச்சு, நக்கல், நையாண்டி நிறைந்த எந்தப் பாடலாக இருந்தாலும் சரி, எஸ்.பி.பி.யை மிஞ்ச எவருமில்லை. அவர் பாடிய பாடல்களை சிலாகித்து பேசும் இளைஞர் பட்டாளம் அதிகமுண்டு. மறைந்த எஸ்.பி.பி.யின் உடலுக்குப் பொதுமக்கள், திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

"இந்திய இசைக்கலைஞர், மூத்த பின்னணி பாடகர், இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.பி.பி. மறைவு என்னை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் பின்னணி பாடகராக ஆறு தேசிய விருதுகள், பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய இறப்பு, இந்திய மக்கள், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும். தன் மெல்லிசை குரலால் எஸ்.பி.பி. நம்முடனேயே இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

"தமிழ்நாட்டு மக்களைத் தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்தவர் எஸ்.பி.பி.. அவர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

முதலமைச்சர் பழனிசாமி

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

"தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் எஸ்.பி.பி.. அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது. அவர் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். தனக்கென சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல். இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி. எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

திமுக எம்பி கனிமொழி ட்வீட்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத அமைதி எனத் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி ட்வீட்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

எஸ்.பி.பி. காலமானார் என்ற செய்தி என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. திரைப்பட பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்டவர். தனது இனிய குரலால் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல என்று தெரிவித்துள்ளார்.

vijayakanth tweet

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்

பாடகர் எஸ்.பி.பி. மீளவில்லை. மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல; மொழி, இனம், மதம், தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன் ட்வீட்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கு மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் பிரபலமைடைந்த எஸ்.பி.பி.யை மண்ணுலகில் பாடியது போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம் எனத் தெரிவித்துள்ளார்.

tamilisai soundararajan tweet

இதையும் படிங்க:எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Last Updated : Sep 25, 2020, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details