சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற த ரெவனண்ட் (The Revenant), த ரெய்டு (The Raid) படத்தொடர் ஆகியவை இதுபோன்ற ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள். இதற்காகவே இவை உலகம் முழுக்க கொண்டாடப்பட்டும் வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை இம்மாதிரியான முயற்சிகளை எவரும் தீவிரமாக எடுத்ததில்லை. இந்நிலையில், முதல் முறையாக ப்ரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25ஆவது திரைப்படமாக உருவாகிவரும் அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் புதிய படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்ஷன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் சாம் ஆண்டன் இக்காட்சி குறித்து கூறியதாவது.
”இது எனது நீண்ட நாள் கனவு, முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும் பல காலம் முன்பாகவே இப்படி ஒரு ஆக்ஷன் காட்சியை எடுக்கத் திட்டமிட்டோம். இப்படத்தில் அக்கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும் உத்வேகமும் நிறைந்த அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால்தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்ஷன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம்.
படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்” என்றார்.