குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சில்லு வண்டுகள்'. சரண்யா 3டி ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சாரங்கேஷ், அருணாசலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், மித்ரா, ரித்கிருத்தி உள்ளிட்ட குழந்தைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.விக்னேஷ் ஒளிப்பதிவு, காளிதாஸ் எடிட்டிங் செய்துள்ள இப்படத்திற்கு 'தேனிசை தென்றல்' தேவா இசை அமைத்துள்ளார். சுரேஷ் கே வெங்கிடி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ராஜன், ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , எஸ்.வி.சேகர், தேவா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் குழந்தைகள் படங்களுக்கு தமிழ்நாடு அரசு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் தேவா பேசுகையில் இது ஒரு சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் குழந்தைகள் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படம் வெற்றிபெற வேண்டும் என்றார்.