ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரிலும் வெளியாகிறது.
இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீஸர்கள் ஆகியவை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. டீஸரில் ரஜினி வேட்டி சட்டை, முறுக்கு மீசை, மாஸான பார்வையில், "கிராமத்தான குணமாத்தான பாத்துருக்க. கோபப்பட்டு பாத்தது இல்லல்ல... கோபம் வந்த காட்டாறு. அவனுக்கு கரையும் இல்ல. தடையும் இல்ல" எனப் பேசிய வசனம் சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், 'அண்ணாத்த' படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்.27) மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் '#AnnaattheTrailer' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் பால்கே விருது வரை ரஜினி!