தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2020, 5:21 PM IST

ETV Bharat / sitara

தமிழ்நாடு அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா? - பா. ரஞ்சித்

சென்னை: தண்டனை பெறாமலேயே ஆணவக்கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள், தமிழ்நாடு அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா? என இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

pa.ranjith
pa.ranjith

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கௌல்சயாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து விடுதலை செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகியோரது விடுதலையை உறுதிசெய்தும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளசல்யா, எனது சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஆணவக்கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித், "மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனங்கள்.

ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்க்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவக்கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா? இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்ப்பு. ஆனால், இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: சங்கர் ஆணவக்கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details