தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேபிள் டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பான 'ஓ மை கடவுளே' - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகார் - ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஓ மை கடவுளே' படத்தை அனுமதியின்றி, கேபிள் சேனலில் ஒளிபரப்பி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது தொடர்பாக படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகார் அளித்துள்ளார்.

Oh My Kadavule movie director complaint
Director Aswath Marimuthu

By

Published : Mar 9, 2020, 11:45 PM IST

சென்னை: 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை அனுமதியின்றி, கேபிள் சேனலில் வெளியிட்டது தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த புதுமுக இயக்குநர் அஷ்வத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'விருதுநகரில் உள்ள மாவட்ட அளவிலான லோக்கல் கேபிள் சேனலில் 'ஓ மை கடவுளே' திரைப்படம் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக திரையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கேபிள் தொலைக்காட்சியை பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து அவர்கள் எங்களது திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர். இதனால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தின் வருமானம் பாதிக்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்டம் அடைகிறது' என்று குற்றஞ்சாட்டினார்.

'எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால், அந்த மாவட்ட போலீஸாரிடம் புகார் அளிக்கும்படி சென்னை காவல்துறை அறிவுறுத்தினர். இதன் பேரில் விருதுநகர் மாவட்ட காவல்துறையிடம் இது தொடர்பாகப் புகார் அளிக்க உள்ளேன்' என்றார்.

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ரெமாண்டிக் காமெடி திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு, தனது பழைய காதலியை பார்க்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்டு காதல், காமெடி, எமோஷன் கலந்த படமாக 'ஓ மை கடவுளே' அமைந்துள்ளது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படம் கணிசமான வசூலையும் குவித்தது.

இதையடுத்து படம் பல்வேறு திரையரங்குகளில் தற்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கேபிள் டிவியில் ஒளிபரப்பானது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:'ஓ மை கடவுளே' படம் பார்த்து பிரிந்த தம்பதி சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர் - வாணி போஜன்

ABOUT THE AUTHOR

...view details