சென்னை: கரோனாவைவிட ஆபத்தானவர்கள் மனிதர்கள் என்று ஆதங்கம் தெரிவித்து காணொலி வெளியிட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் பால சரவணன்.
"கடந்த மூன்ற நாள்களுக்கு முன் வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினி மருந்து தீர்ந்துபோனதால் கடைக்குப் போய் வாங்கினேன். 60 ரூபாய் மதிப்புள்ள சானிடைசரை 135 ரூபாய் விற்றார்கள். இது பற்றி ரசீது கொடுத்தவரிடம் கேட்டபோது இங்கு வேலை பார்ப்பவன் நான், எனக்குச் சொன்னதைச் செய்கிறேன் எனப் பரிதாபமாகச் சொன்னார். சரி என்று கிளம்பிவிட்டேன்.
இதன்பின்னர் காபி குடிக்க காபி ஷாப்புக்குச் சென்றபோது அங்கிருந்த பெண், கைகளைச் சுத்தமாக்கிக்கொள்ள சானிடைசர் கொடுத்தார். அப்போது அவர் 75 ரூபாய் மதிப்பு சானிடைசரை 115 ரூபாய்க்கு விற்கிறார்கள் எனப் புலம்பினார்.
அவரிடம் எனக்கு இது நடந்தது. என்னைப்போல் அங்கிருந்தவர்களும் தனக்கு இது நடந்ததாகக் தெரிவித்தனர். தற்போது கரோனா தொற்று காரணமாக அனைவரும் சானிடைசர் வாங்குவதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு, மூன்று மடங்கு விலையேற்றம் செய்துள்ளனர்.
இதுபோன்ற அவசர சூழ்நிலையை லாப நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது கேவலமான விஷயம். கரோனாவைவிட கொடூரமானவர்கள் மனிதர்கள்.
இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் சானிடைசர், ஹேண்ட் வாஷ் போன்ற பொருள்களைக் குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். மக்களுக்காகப் பெரிய நிறுவனங்கள் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதிகபட்ச சில்லறை விலையிலாவது (எம்ஆர்பி) விற்கலாம்.
எனக்குத் தெரிந்தவரை இந்த ஊரில் சாதி ஒழியாது, ஏற்றத்தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழாது" என்று காணொலி வாயிலாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குக் கைகழுவுதல், முகமூடி அணிதல் போன்றவற்றை பொதுமக்கள் மேற்கொண்டுவருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் சானிடைசர்களையும் கைகளில் தேய்த்துக் கொண்டுவருகின்றனர்.
இதனால் சானிடைசர்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்த பலரும் அதற்கு நிர்ணயப்படுத்தியிருக்கும் அதிகபட்ச விலையிலிருந்து கூடுதல் விலைக்கு விற்கும் போக்கில் விற்பனையாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.