இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சாத்தான்குளம் காவல் துறையினரின் அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழ்நாடு முழுவதும் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காவல் துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல் துறையை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக்கொண்டே இருக்கிறது. காவல் துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள் இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம்.
அதில் தமிழ்நாடு இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம். காவல் துறையில் வரம்பு மீறல்கள் சாமானியர்களை அவமரியாதையாக பேசுவதில் தொடங்கி இன்று மக்களின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் அளவிற்கு ஆளும், ஆண்ட கட்சிகள் வளர விட்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் என தவறினை வேரோடு அகற்ற முயற்சிகள் தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாட்டை ஆண்ட ஆளும் கட்சியில் தொடர்ந்து புறக்கணித்து வரும் காவல்துறையில் சீரமைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் காவல்துறையின் அதிகாரத்தை கண்காணிக்கவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களை பாதிக்காமல் மக்கள் பணியாற்ற வழி செய்யும் வகையில் பல முறை திட்டங்களையும் வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது.
அந்த வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் காவல்துறையினரின் தவறுகளையும் அத்துமீறல்களையும் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக காவல்துறையில் புகார் அமைப்பை அமைத்து அதை முறையாக செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரைக்கும் நீதிபதிகள் இடம்பெற வேண்டும். அரசின் கட்டுப்பாடு சுதந்திரமாக இயங்கும் இந்த இயக்கம் அரசியல் அழுத்தங்களிலிருந்து காவல்துறையையும் காவல்துறை அலுவலர்களில் இருந்து மக்களைக் காத்திடும் வேலை செய்யும்.
ஆனால் தமிழ்நாடு அரசு பெயருக்கு அமைந்துள்ள மாநில அளவிலான அமைப்பில் காவல் அலுவலர்களே அந்தப் புகார்களை விசாரிக்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை, மக்களின் உயிரையும் மதிக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.