சென்னை: தாய், தந்தை கெஞ்சி கேட்டும் வேலையைவிட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இந்த வேலை வேண்டாம் என 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டித்துரை என்பவரின் தாய் அவரைக் கெஞ்சி கேட்டு, ஊரிலுள்ள தனது வீட்டுக்கு வருமாறு கூறியபோது, தனக்கு சமூக அக்கறைதான் முக்கியம் என்று அவர் தாயிடம் சொன்ன கேட்பொலி (ஆடியோ) பதிவு பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தன்னலம் பாராமல் பிறருக்கு உழைக்கும் இந்த ஓட்டுநர் பாண்டித்துரையை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில்,
"108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டுக்காக முன்னிற்கும் வீரர்கள்தான் நம் நாட்டை இயக்குபவர்கள்.
பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும்போதும் நாடு என்னவாகும்? என்று கேட்கும் அந்த மனம்தான் கடவுள். கட உள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் இந்த வேலையைவிட்டு வரும்படி கெஞ்சிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவந்தது.
நெகிழவைக்கும்விதமாக அமைந்திருந்த இந்த உரையாடலைக் கேட்ட கமல்ஹாசன், அந்த ஓட்டுநரை தனது 'அன்பே சிவம்' படத்தில் வரும் வசனத்துடன் ஒப்பிட்டு மனமார பாராட்டியுள்ளார்.