தமிழ் சினிமாவில் 'நீர்ப்பறவை', 'மரியான்', 'கடல்' என சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 75 விழுக்காடு இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறு சிறு தீவுகளில் 'ஜூவாலை' என்னும் திரைப்படம் உருவாகிவருகிறது.
இயக்குநர் பாலுமகேந்திரா, ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் இப்படத்தை இயக்கி அதில் அவரே நடித்தும்வருகிறார்.
மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப்படம் குறித்து இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல், தன்னுடைய முதல் படமானது கடல் சூழ்நிலைகளைச் சார்ந்து படமாக்க வேண்டியிருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்ததாக தெரிவித்தார்.
படத்தின் தலைப்பு குறித்து ரஹ்மானிடம் கேட்கையில், கடலை கதைக்களமாக எடுத்திருந்ததால், 'ஜூவாலை' என பெயர் வைத்திருப்பதாகக் கூறினார். மேலும் ஒரு ஆழமான கருத்தைப் படம் அடக்கியுள்ளதாலும் படத்திற்கு அப்பெயர் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை போல, நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கிறது, அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலைதான். நமது உடைமை, உரிமை என ஏதாவது ஒன்றுக்கு பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலையானது பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது. ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான். அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்றார்
லண்டனைச் சேர்ந்த மைக்முஸ் சாம்ப் என்னும் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர், ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்துவருகிறார். இவர் 'பிரின்ஸ் ஆஃப் த சிட்டி', 'பைலட் கஃபே' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவர் முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்குப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம்