தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பியூட்டி பார்லர் மூடினால் என்ன...'- இயற்கைப் பொருட்கள் கொண்டு மேக் அப் செய்யும் நடிகைகள்! - நடிகை சஞ்சனா சிங்

ஊரடங்கு காலத்தில் பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் போன்றவை மூடப்பட்டுள்ள நிலையில் திரைத்துறையில் உள்ள நடிகைகள் தங்கள் அழகை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது குறித்து நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ளார்.

sanjana
sanjana

By

Published : May 14, 2020, 6:43 PM IST

சினிமா நட்சத்திரங்களுக்கு அழகும் உடலமைப்பும் தான், அவர்களின் தொழிலுக்கு மூலதனமாக அமைகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அழகையும் உடலையும் இந்த கரோனா ஊரடங்கு உத்தரவின் போது எப்படி பராமரிக்கிறார்கள் என்பது குறித்து நடிகை சஞ்சனாசிங், நடிகை ஆர்த்தி ஆகியோர், "ஈ டிவி பாரத் தமிழ்நாடு" ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியைக் காணலாம்.

'ரேனிகுண்டா','கோ','அஞ்சான்','மீகாமன்','அசுரவதம்' போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா சிங் இதுகுறித்து கூறுகையில், 'நான் கரோனா ஊரடங்கு காலத்தில், எனது அழகைப் பராமரிக்க சமையலறையில் உள்ள பொருட்களை அழகு சாதனப்பொருட்களாகப் பயன்படுத்திக்கொண்டேன். தக்காளி, காபித்தூள், தயிர், தேன், கற்றாழை, பருப்பு வகைகளை முகத்திற்கு மாஸ்க்காகப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்து கொள்வேன்.

நடிகை சஞ்சனா சிங்

அதேபோன்று தலைமுடிக்கு முட்டை, வெங்காயம் போன்றவற்றைப் பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்து கொள்வேன். இது போன்று நமது சமையலறையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தும்போது நமது ஸ்கின் மிகவும் பொலிவோடும் ஆரோக்கியத்தோடும் உள்ளது. சமையலறைப் பொருட்களை வைத்தே என் சருமத்தை பாதுகாத்துக் கொண்டேன்.

இதேபோன்று, எனது உடலைப் பாதுகாக்கும் முயற்சியிலும் நான் ஈடுபட்டேன். நம் வீட்டில் உள்ள தண்ணீர் கேன், டவல் போன்றவற்றை வைத்து நான் உடற்பயிற்சிகளை செய்தேன். உணவு வகைகளை எடுத்துக்கொண்டால், என்னால் முடிந்த அளவுக்கு பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டேன். அதன்மூலம் எனது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது’ என்றார்.

நடிகை ஆர்த்தி

தொடர்ந்து நடிகை ஆர்த்தி கூறுகையில், 'கரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நடிகைகள் அழகை எப்படி பராமரிக்கிறார்கள்? பியூட்டி பார்லர் இல்லாததால் நடிகைகள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனால், நடிகைகள் முன்பைவிட இப்போது மிகவும் அழகாக இருப்பார்கள். ஏனென்றால், முன்பு வெயிலில் அதிகப்படியான வேலை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக கேரவனில் வந்து ஓய்வு எடுப்பார்கள். வெப்பமும் குளிரும் சேர்ந்து அவர்களின் தோல் மிகவும் பாதிப்படைந்து இருக்கும்.

இப்பொழுது வீட்டிலேயே உள்ளதால், இந்த பிரச்னை இல்லை. அதுமட்டுமல்லாமல், பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளதால் மூலிகைகள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஃபேஷியல் செய்து கொள்வது போன்ற அழகுக்குறிப்புகளை தாங்களாகவே செய்து கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல் உணவகங்களில் உணவு உண்ணாமல் வீட்டில் சமைத்த ஆரோக்கிய உணவை உண்ணும் நிலை, அதிக நேரம் கிடைப்பதால் நல்ல உடற்பயிற்சி செய்வார்கள், அப்படியாக தூய்மையாக இருப்பார்கள்.

நடிகை ஆர்த்தி

அதனால் முன்பைக் காட்டிலும் அனைத்து நடிகைகளும் ஸ்கிரீனில் பார்க்கும் போது மிகவும் அழகாகவும் தெரிவார்கள். ஏனென்றால் பார்லர்களில் கெமிக்கல்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இயற்கைப் பொருட்களால் நடிகைகளின் அழகு கூடியிருக்கும்.

இனிமேல், பியூட்டி பார்லர் செல்வதற்குக்கூட யோசிக்கும் அளவிற்கு, இந்த கரோனா ஊர் அடங்கினால் அவர்கள் பயன்படுத்திய இயற்கை அழகுப் பொருட்கள் நல்ல பயனைக் கொடுத்திருக்கும்’ என்றார்.

இதையும் படிங்க: நடிகர் ராதாரவிக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details