சென்னை:வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. சிவகங்கை மண்ணின் வீரத்தைச் சொல்லும் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில் ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத்திருநாளில் தொடங்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து படக்குழு தரப்பில், "சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224ஆவது நினைவுநாள் டிசம்பர் 25ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டது.
வேலு நாச்சியார் திரைப்பட போஸ்டர் வீரமங்கை வேலுநாச்சியாரின் கதையைத் திரைப்படமாக எடுக்க சட்டரீதியாக உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியாராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணிமாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ’சூரியவம்சம்’ ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு, தொழில்நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா எடிட்டிங், டி. பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வை செய்யவிருக்கின்றனர். இவர்களுடன், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணையவிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வேலு நாச்சி'...'முல்லை'... மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த சித்ரா யார்?