தமிழ் சினிமாவில் 'ஆசை', 'நேருக்கு நேர்', 'ரிதம்', 'சத்தம் போடதே' உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் வசந்த்.
இவர் தற்போது 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இன்னும் திரைக்கு வராத இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக் குவித்து வருகிறது.
இயக்குநர் வசந்தே செந்தமாக தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமெளலி, காளிஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி ராய். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.
பாடல்கள், பின்னணி இசை இல்லாமல் வெறும் நேரடி சத்தங்களை வைத்தே உருவாக்கியுள்ளனர். இதனால் படத்துக்கு இசையமைப்பாளர் கிடையாது. ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஜப்பானில் புகழ்பெற்ற ஃபூக்குவோகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனிடையே பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் வசந்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.