தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2019, 10:26 AM IST

ETV Bharat / sitara

’மான்ஸ்டர்’ சக்சஸ் மீட்: எலி மாமாவான நடிகர் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான ‘மான்ஸ்டர்’ படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

Monster team

‘மான்ஸ்டர்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, முதல் வார வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன். அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் கொடுத்து நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர். இதே குழுவுடன் மீண்டும் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார்.

‘மான்ஸ்டர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரமாண்டமாக காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதற்றம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள், படத்தை பார்த்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. இதேபோல் தரமான படங்களை இயக்குவேன் என்றார்.

இதில் பேசிய வசனகர்த்தா சங்கர், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸின் நோக்கம் குடும்பத்தோடு வந்து படம் பார்க்க வேண்டும். ஏவிஎம்மிற்கு பிறகு இவர்களுக்குதான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். கதை என்பது ஆத்மா. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரம்மாக்கள்தான்.

ஒரு திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது வசனம் என்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரைப்படம்தான் சரியான தேர்வு. நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்திற்கு இந்தளவு பொருத்தமாக இருப்பார் என நினைக்கவில்லை என்றார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே முக்கியம் என்பதை படம் நிரூபித்துள்ளது இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க விரும்புகிறேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details