இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் அந்நியன். இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் எடுக்க உள்ளதாக ஷங்கர் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று (ஏப்ரல் 15) ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநர் ஷங்கர் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஷங்கர் கூறியிருப்பதாவது, "'அந்நியன்' திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய ஈ-மெயிலை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்நியன் 2005ஆம் ஆண்டு வெளியானது. படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன் 'அந்நியன்' படம் வெளியானது. படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை. எனவே இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனதுஉரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.
மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.