தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தலைக்கணம் இல்லாத மனிதன் தாமிரா - இயக்குநர் சீனு ராமசாமி உருக்கம்! - இயக்குநர் தாமிராவுக்கு நினைவஞ்சலி

சென்னை: 'என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று, உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்' இயக்குநர் தாமிராவின் நினைவஞ்சலிக்காக, இயக்குநர் சீனு ராமசாமி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

seenu ramasamy
seenu ramasamy

By

Published : Sep 27, 2021, 5:05 PM IST

அந்த அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம்! தங்களோடு பயணித்த ஒரு படைப்பாளியை நினைவுகூர நினைத்த உங்கள் பெரு உள்ளத்திற்கு இந்த வணக்கம் அன்பின் காணிக்கை.

அவர் சொன்ன வார்ததைகளை நினைக்கும் என் மனம்

'ஒரு முறை, ஒரு மேனேஜர் வேணும் சீனு' என்றார், இயக்குநர் தாமிரா. என் உடலில் பாகமாக இருக்கும் நண்பன் ஜாகீர் உசேனை அனுப்பி, என்னுடன் நீ இருப்பதை போல அவருடன் இரு என்றேன்.

'ஒரு ஆண்டு கழித்து ஜாகீரை தந்தமைக்கு நன்றி' என்றார்,தாமிரா.

கரோனா காலத்திற்கு முன்பு, ஒரு உதவி இயக்குநர் வேண்டும் என்றார். என் மீது மையல் கொண்டு, என்னிடம் வந்து சேர முயன்ற இளைஞன் ஒச்சுமாயியை அனுப்பினேன்.

அந்த தம்பிதான் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களை ஒவ்வொரு நாளாக நம்பிக்கையாக சொல்லி, ஊக்கப்படுத்திக்கொண்டே வந்தான்.

இயக்குநர் தாமிரா

ஆனால், இதய தசைகள் கிழிபட, தாமிரா சார் நம்மை விட்டுட்டு போயிட்டார் சார் என்று அலைபேசியில் அழுதான்.

அன்று முழுவதும் அமைதியாக இருந்தேன். அவர் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பத்திரியின் வாசலை இப்பவும் கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் என் மனம்.

உங்களுக்கு தோல்வி இல்லை

'சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி… அது ஸ்கீரின் பிளேல்ல வருது.. அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல.. உடம்ப மட்டும் பாத்துக்கங்க சீனு' என்றார்.

உலகம் என்னை கைவிட்ட ஓர் நாளில் அவரிடம் இருந்து எனக்கு வந்த வார்த்தைகள் இவை.

உலகம் மட்டுமல்ல என்னை நானே அப்போது கைவிட்டிருந்தேன். 'சரிங்க சார்' என்று மட்டும் சொன்னேன்.

என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று, உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.

பிறந்து மூணு மாதம் ஆன என் மூத்த மகளின் அருகே படுத்து நிம்மதியாக தூங்கினேன். அந்நாள் இந்நாள் போல் நினைவில் இருக்கிறது. நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயைப் போல் உயர்ந்தவன். இயக்குநர் தாமிரா அவர் நேசித்த தாமிரபரணி ஆறும் அப்படியானது தான்.

தன்னம்பிக்கையாளர் தாமிரா

இயக்குநர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997ஆம் ஆண்டு அண்ணன் சீமான் அவர்களின் சாலிகிராம வீட்டில்.

ஒரு எழுத்தாளராக அறிமுகமானார். கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து, நெருங்கி அவருடன் நட்பு பாராட்டத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால், அவரும் என் நெருக்கத்தை விரும்பினார்.

இயக்குநர் தாமிரா

பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறன்.

அவர் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன்.

எப்போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் அவர் இருந்தார்.

அவர் பெற்ற குழந்தைகளை சிறுவயதில் வடபழநி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.

எப்போது சந்தித்தாலும் இலக்கியம், சினிமா எனப் பேசி களைத்திருக்கிறோம்.

அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையுற்று, நாளை பற்றிய நம்பிக்கையோடு இருந்தவர். சதா இயங்கிய படி இருக்கும் தன்னம்பிக்கையாளர். எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார்.

தலைக்கணம் இல்லாத மனிதன்

என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தோற்றவனுக்கு பிரியமாக தரும் சிகரெட் போல, எனக்கு ரொம்ப முக்கியமானது. அவர் கோல்டுபிளேக் கிங்ஸை எனக்கு நீட்டி "வாங்க சீனு" என்பார்.

பின்பு சிகரெட் குடிப்பதை அறவே நிறுத்தி அதற்கு எதிராக என்னிடம் பரப்புரை செய்தார். புகைப்பவர்களுக்குத் தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று.

முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில், என் திரியைத் தூண்டியவர் இயக்குநர் தாமிரா.. தாமிரா ஒரு நல்ல ஆன்மா. தன் தந்தையை பெருமையாக கொண்டாடியவர்.

தன் சொந்த ஊரை நேசித்த கலைஞன். தலைக்கணம் இல்லாத மனிதன். வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி, அவரை காலம் எடுத்துச் சென்று விட்டது.

என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து, மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன். அவர் சிரிப்பில் எப்போதும் ஒரு இளவெயிலை உணர்ந்திருக்கிறேன்.

இப்போதும் இக்கணத்திலும். தாமிரா சார்.. உங்கள் புகழ் வாழ்க... நீங்கள் நடந்த பாதங்களால் உருவாக்கிய நல்லுணர்வுமிக்க ஒற்றையடிப்பாதையில் உங்கள் சந்ததிகள் வளர்க!

தன் விவசாய நிலத்தில் காலூன்றி நிற்கும் உங்கள் தந்தை வாழ்க.. வாழ்க வாழ்க அன்புமிகுந்த தோழரே நீர் வாழ்க... நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் அலைபேசியை எடுக்க காத்திருப்பேன்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தாமிரா என்ற தேவதை..!

ABOUT THE AUTHOR

...view details