தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தந்தை மகேந்திரனுக்கு பத்திரிகையாளர்கள் செய்த மரியாதை அபாரம்..!' - ஜான் மகேந்திரன் நெகிழ்ச்சி!

இயக்குநர் மகேந்திரன் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜான் மகேந்திரன், பத்திரிகையாளர்களுக்கு உணர்ச்சிப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி

By

Published : Apr 9, 2019, 6:07 PM IST

Updated : Apr 9, 2019, 7:50 PM IST

தமிழ் திரையுலகில் எளிய மக்களின் வாழ்வியலை சினிமாவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், புதிய திரைமொழியில் கதையாக வடித்தவர் இயக்குநர் மகேந்திரன். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மெட்டி, ஜானி உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். காலம் கடந்தும் பேசும் படங்களை கொடுத்த இயக்குநர் மகேந்திரன், கடந்த 2 ஆம் தேதி மரணமடைந்தார். இதை கேட்டு மகேந்திரனின் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மகேந்திரன் குறித்தும், அவரது படைப்புகள் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதி தங்களின் ஆறாத துக்கத்தை ரசிகர்கள் எழுதி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், அனைத்து பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள், யூ ட்யூப் சேனல்கள் உள்ளிட்ட அனைத்து வித ஊடகங்களிலும், தமிழ் சினிமாவிற்கு மகேந்திரன் விட்டுச்சென்ற படைப்புகளை மீண்டும் கொண்டாடியும், மகேந்திரனின் திரை ஆளுமை குறித்தும் செய்திகளை வெளியிட்டு தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில் இயக்குநர் மகேந்திரனின் மகனும், சச்சின் பட இயக்குநருமான ஜான் மகேந்திரன், ஊடகத்திற்கு நன்றி கூறி உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களுக்கு, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்பா இனி இல்லை, என்ற வாக்கியம் இன்னும் நம்ப முடியாத வார்த்தைகளாகத்தான் தெரிகிறது. எல்லாமே ஒரு கண்ணைத் திறந்து கொண்டு காணும் கெட்ட கனவாகத்தான் அரங்கேறியது. ஏப்ரல் இரண்டாம் தேதி அதிகாலை ஆறே கால் மணிக்கு அப்பா தன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக அப்பாவின் அடக்கம் அன்று மாலை நான்கு மணிக்கு நடந்தேற வேண்டிய செய்தியை சினிமா மக்கள் தொடர்பாளர் நிகிலிடம் கூறினேன். அடுத்த நிமிடம், எங்கள் வீட்டின் முன் பத்திரிகை நண்பர்கள் வந்திறங்கினர். எங்கள் குடும்பத்தின் மன நிலையை புரிந்துகொண்டு, அனைவரும் மிக அமைதியாக தங்கள் கடமையை செய்தனர். அப்பாவின் கடைசி நிமிடங்களை பார்க்க முடியாமல் போன பல பேருக்கு, ஊடக நண்பர்கள் தங்கள் திறமையால் உலகம் முழுக்க கொண்டு சென்றனர்.

அந்த வெயிலிலும் வந்திறங்கிய பத்திரிகை நண்பர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முடியாத சூழலில் கூட அப்பாவின் அடக்கம் வரை வந்து நின்ற அந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. பல விதமான ஊடகங்களில் அப்பாவின் கடைசி யாத்திரையை பார்த்து இந்த விநாடி வரை எங்கள் தொலைபேசி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பத்திரிகையாளராக தன் வாழ்க்கையை தொடங்கி திரைப்படத் துறையில் பல உச்சங்களை தொட்ட எங்கள் தந்தைக்கு பத்திரிகை நண்பர்கள் செய்த மரியாதை அபாரமானது, என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 9, 2019, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details