இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'மாநகரம்', 'கைதி' படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின் விஜய், விஜய் சேதுபதியை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநரானார்.
தற்போது கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை என் குடும்பம், நண்பர்கள், நலன் விரும்பிகளுக்கு இதன்மூலம் அறிவிக்கிறேன்.
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைந்துவருவேன்" எனப் பதிவிட்டுள்ளார். கரோனா பாதிப்பிலிருந்து லோகேஷ் கனகராஜ் விரைந்து குணமடைய வேண்டி, ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.