தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2020, 12:33 PM IST

ETV Bharat / sitara

'லிங்கா' படத்தின் கதையை நாங்கள் திருடவில்லை - கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

கதைத்திருட்டு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றவர்கள் இதுவரை யாரும் வென்றதில்லை. கதை திருட்டு விவகாரத்தில் சிக்கவைத்தபோதும் 'லிங்கா' 188 கோடி ரூபாய் வசூலித்ததாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.

Linga Plagiarism issue
Director KS Ravikumar

சென்னை: 'லிங்கா' படம் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக படக்குழுவினருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

2014ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் 'லிங்கா'. இந்தப் படம் கதை திருட்டு தொடர்பான வழக்கில், லிங்கா படக்குழுவுக்கு ஆதரவாக மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்துப் பேசினர்.

இதுபற்றி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசியதாவது:

நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் தயாரிப்பாளர் படத்தை எடுக்கிறார். அதைத் திருட்டுக் கதை என்று கூறும்போது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது நீதிமன்றம் செல்லாமல் துறைசார்ந்த சங்கங்களைச் சந்தித்து தீர்வு காணலாம். படம் வெளியாகும் சமயத்தில் நேரடியாக நீதிமன்றத்துக்கு செல்வது பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

'லிங்கா' படக்குழுவினருக்கு இதனால் மிகுந்த இடைஞ்சல் ஏற்பட்டது. படத்தின் இறுதிகட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்ற சிஜி பணிகள் சரிவர செய்ய முடியாமல்போனது. இதன் காரணமாக படம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் அந்தப் படம் 188 கோடி ரூபாய் வசூல் செய்தது. கதைத்திருட்டு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றவர்கள் இதுவரை யாரும் வென்றதில்லை.

இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எழுத்தாளர் சங்கத்துக்கு கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. சரியான ஆதாரம் இல்லாமல் கதை திருட்டு என்று தவறாகப் புகார் கூறும் நபர்கள் மீது எழுத்தாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் லிங்கா படத்தின் கதையை நான் திருடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Director KS Ravikumar on Linga Plagiarism issue

இதைத்தொடர்ந்து நடிகர் சங்கப் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது குடும்பத்துக்குள் தகராறு இருப்பது போல் வருத்தமளிக்கிறது. எதுக்கு சண்டைபோட வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டு சங்கத்தை வழிநடத்த வேண்டும் என இருதரப்பினருக்கும் கோரிக்கைவைத்தார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசுகையில், "படத்தை ரிலீஸ் செய்யும்போது இறுதிநேரத்தில் மிரட்டுவதற்காக அல்லது எந்த ஆதாயத்துக்காக இதுபோன்று செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

படம் வெளியாகும் நேரத்தில் நீதிமன்றத்துக்கு சென்று படக்குழுவினருக்கு இடையூறு ஏற்படுத்துவது, இந்தத் துறைக்கு நல்லது அல்ல. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் எப்போதும் வெற்றிபெறமாட்டார்கள்.

கதை திருட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதற்காக மட்டும் 50 லட்ச ரூபாய் செலவானது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details