தமிழ்நாடு

tamil nadu

'காதலி மாறலாம் ஆனால் காதல் மாறாது' - காதலில் ஆண்கள் எப்போதும் 'அட்டகத்தி'தான்

By

Published : Aug 15, 2020, 11:41 PM IST

எட்டு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் வெளியான அட்டகத்தி படத்தை சிறந்த தமிழ்ப்படங்களின் பட்டியலில் இருந்து தவிர்த்துவிட முடியாது. இளமை, காதல், குறும்பு, அவமானம், ஏமாற்றம் என முன்னாள், இந்நாள் இளைஞர்களின் இனிமையான காதல் அனுபவங்களின் தொகுப்பாக அமைந்து ரசிக்க வைத்தது இந்த படம்.

Attakathi movie
அட்டகத்தி திரைப்படம்

அட்டகத்தி-ன்னா என்ன என்ற கேள்வியுடன் வெளியிடப்பட்ட முதல் டீஸர் மூலமாகவே படத்தில் மீதான ஆர்வத்தை எகிற வைத்தார் அறிமுக இயக்குநராக களமிறங்கிய பா. ரஞ்சித். இதற்கு அடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்கள் எளிய மனிதர்களை வஞ்சிக்கும் அரசியலை கூர்மையாக பேசி, ரஞ்சித் பிராண்ட் சினிமா என கோலிவுட்டில் தனிமுத்திரை குத்தப்பட்டது.

ஆனால், அதே எளிய மனிதர்களின் வாழ்வியலை குறிப்பாக, இளைஞர்கள் காதல் மீது வைத்திருந்த பார்வை அவர்களின் போக்கிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்த அட்டகத்தி முற்றிலும் மாறுபட்ட ஃபிளேவர்.

அட்டகத்தி படக் காட்சிகள்

தமிழ் சினிமாவில் அரிதிலும் அறிதாக அவ்வப்போது சில படங்கள் கதை என்ற அடிப்படை விஷயம் இல்லாமல், ரசிக்க வைக்கும் கோர்வையான காட்சியமைப்புகளினால் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறுவதுண்டு. அந்த வரிசையில் அட்டகத்தி படத்துக்கான கதை என்பது எல்லோர் வாழ்க்கையிலும் காதல் என்ற பெயரில் நிகழ்ந்திருக்கும் வேடிக்கையான, குறும்புத்தனமான சம்பவங்களின் தொகுப்புகள்தான். அவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டு (2k கிட்ஸ்) முதல், வயதான ஆண்களையும் கண்ணாடி நோக்கி வெட்க புன்னகையுடன் நின்று, தங்களது பழைய காதல் நினைவுகளோடு அசடு வழிய வைத்தது.

தமிழ் சினிமாக்களில் காதலித்து வெற்றி பெறும் ஹீரோக்கள், காதலால் தோல்வியடையும் ஹீரோக்கள் என இந்த இருவகைகளில் சினிமாக்கள் விரல் விட்டு எண்ணாத அளவில் வந்துள்ளன. ஆனால் காதல்கள் செய்யும் ஹீரோக்களும், காதல் நிறைவேறாமல் தோல்வியுற்றாலும் கிடைத்த வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழும் சராசரி மனிதர்களை ஹீரோவாக முன்னிப்லைப்படுத்தி ’அட்டகத்தியாக இந்தப் படத்தில் தினேஷ் அமர்க்களப்படுத்தி இருந்தார்.

அட்டகத்தி படக் காட்சிகள்

குறிப்பாக பெண், ஆண்களை ஏமாற்றிவிட்டாள், பெண்ணாள் ஆண் தனது வாழ்க்கையை தொலைத்தான் என்ற கிளேஸே கதைகளுக்கு மத்தியில் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் வழியிலேயே காதலிப்பதும், அந்தக் காதல் தோல்வியுற்றால் மனம் தளராமல் அடுத்த பெண்ணை நோக்குவதும், காதலிப்பதுமாக இருக்கும் அட்டகத்தி பசங்களின் வாழ்க்கை எதார்த்தத்தை பிரதிபலித்தது.

அட்டகத்திகளுக்கு காதலி மாறலாம். ஆனால் அவனது காதல் என்றுமே மாறாது. நேற்று திவ்யா, இன்று நதியா, நாளை யாரோ எனச் செல்லும் அவர்களின் வாழ்க்கை பயணம்தான், தற்போது அநேகம் பேரின் அன்றாட வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டும்.

இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர்கள் மட்டுமல்லாமல் டெக்னிஷ்யன்களும் கூட முற்றிலும் புதுமுகங்கள் என புத்தம் புதிய கூட்டணியுடன் வெளிவந்த இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.

நகரம், கிராமம் என்ற களங்களில் கதை சொல்லப்பட்டு வந்த தமிழ் சினிமாக்களில், புறநகர் கிராமப்பகுதி மக்கள் வாழ்வியலை காலைபொழுது பேருந்து பயணத்துக்காக கால் கடுக்க காத்திருக்கும் காட்சியிலேயே படம் தொடங்குபோது, அந்தக் கூட்டத்தில் நாமும் இருக்கிறோமோ என்ற தேடலை மனதுக்குள் ஏற்படுத்தியது.

அட்டகத்தி படக் காட்சிகள்

பேருந்தில் செல்லும் பெண்களை இம்ரஸ் செய்ய ஃபுட்போர்டு பயணம், கானா பாட்டு, கலாய்ப்புகள் என அக்மார்க் நகர்-கிராம இளசுகளின் லூட்டிகள் காட்சிக்கு காட்சி சிரிப்பையும், அதே சமயம் பழைய நினைவுகளையும் பார்வையாளர்களிடையே வரவழைத்தது.

அறிமுக நடிகராக தினேஷ், தீனா என்ற கேரக்டரில் அட்டகத்திகளின் முழு உருவமாக தன்னைத் தானே செதுக்கியிருப்பார். பள்ளி மாணவியான அட்டகத்தி நந்திதாவிடம் காதலை சொல்ல முயற்சித்து பல்பு வாங்கி, ஃபெப்சி அருந்தி (மது இல்லாமல்), தியேட்டரில் ரயில் பயணங்களில் படம் பார்த்து பின்னர் சோகத்தை வழுக்கட்டாயமாக வரவழைக்கும் காட்சி ஏ1 ரகம்.

இப்படியொரு போலியான சோகத்தை முகத்தில் வெளிக்காட்டுவதற்கு தினேஷ் போல் ஏராளமான ரெபரண்ஸ் எடுத்துகொண்டு பலரும் தங்களது வாழ்வில் திண்டாடியதை அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது.

அட்டகத்தி படக் காட்சிகள்

அதே நந்திதாவை ’ரூட்டு தல’ என்ற கெத்துடன் மீண்டும் கல்லூரியில் சந்தித்து, தனது பழைய காதலை புதுப்பிக்க அவரிடம் காட்டிய அக்கறை, அன்பு எல்லாம் தவிடுபொடியாகும் விதமாக கிளைமாக்ஸில் தினேஷ் வாங்கும் பேரிடி, பார்வையாளர்களுக்கு சிரிப்பு சரவெடியாக ஒலிக்கும் விதமாக அமைந்திருந்தது.

நந்திதாவுக்கு இடையே ஐஸ்வர்யா, திவ்யா, நதியா என மூன்று பெண்களிடம் காதலும், அவர்களால் பெற்ற ஏமாற்றமும் என தனது சோகத்தால் பார்வையாளர்களுக்கு கலகலப்பூட்டினார்.

இரண்டாம் பாதியில் அட்டகத்தி டூ ரூட்டு தல என நடிப்பில் தீனா மட்டுமல்லாமல், அவரது நண்பர்கள் பின்னணி நடிகர்கள் என அனைவரும் சினிமாவில் காட்டப்படும் வழக்கமான கல்லூரிபோல் இல்லாமல் நிஜத்தில் நாம் அனுபவித்த கல்லூரி நாள்களை நினைவுபடுத்தியிருப்பார்கள்.

வேற்று மொழி ரீமேக் படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்வதற்கு கதை, களம் இன்ன பிற விஷயங்களைக் காட்டிலும், அனைத்து மனிதர்களுக்கு ஒரே உணர்வுதான் என பொதுமொழி முன்வைக்கப்படுவது வழக்கம், அந்த வகையில், அட்டகத்தி படமும் பேன் இந்தியா கண்டென்ட்தான். இதனை அப்படியே ரீமேக் செய்தாலும், இல்லை அந்தந்த நிலப்பரப்புக்கு ஏற்ற சூழல்களோடு ரீமேக் செய்தாலும் படம் ஹிட்டடிக்கும் என்பதை மறுக்கமுடியாது.

இதையும் படிங்க: மைலி சைரஸ் - காடி சிம்சனின் 10 மாத டேட்டிங் முடிவுக்கு வந்தது

ABOUT THE AUTHOR

...view details