நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றனர். இவர்கள் வீடு திரும்ப அரசு ஒரு பக்கமும் பிரபலங்கள் சிலரும் உதவி வருகின்றனர்.
இதனையடுத்து ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தேனீக்கள் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியானப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "காலை கண் விழித்தபோது, என் ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களைக் காண முடிந்தது. வெளியே சென்று பார்த்தபோது என் வீட்டு பால் கனியின் அருகே உள்ள மாமரத்தில் இந்த மிகப்பெரிய தேன் கூட்டைக் கண்டேன்.
நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால், நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்துதலுமின்றி, வேறு இடத்துக்கு மாற்ற சிலரை அழைத்தேன். இறுதியாக, என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருத்து அடித்து, அவற்றைக் கொல்வது. மற்றொன்று அவற்றோடு வாழப்பழகிக் கொள்வது.