பல திரைப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாமல், தங்கை போன்ற சிறிய ரோல்களில் நடித்து வந்தாலும், தனது நடிப்பு திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, வடசென்னை, காக்க முட்டை போன்ற படங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு பூமிகா என பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தை வேதாளம் சொல்லும் கதை படத்தின் இயக்குநர் ரதீந்தரன் ப்ரசாத் எழுதி இயக்கியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ரதீந்தரன் ப்ரசாத் கூறுகையில், " டெக்னிகலாக இது திரைக்கு வரும் எனது முதல் படம். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் படம் 35 நாட்கள் தொடர்ச்சியாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு காடுகளில் கடுமையான சூழ்நிலை மத்தியில் எடுக்கப்பட்டாலும், படக்குழுவின் ஒத்துழைப்பால் விரைவாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் ஆகியோருடன் நிறைய புது முகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara ) ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் "என்றார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (ஆக.22) இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.