தமிழ் சினிமா 80-களின் கனவு ராணி நடிகை ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டி என்ற கிராமத்தில் 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி அய்யப்பன்-ராஜேஸ்வரி என்ற தம்பதிக்கு மகளாகப் பிறந்த இவர், நான்கு வயதில் துணைவன் என்ற படத்தின் மூலம் திரைத் துறையில் தனது கால்தடத்தைப் பதித்தார்.
தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வலம்வந்த ஸ்ரீதேவி. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். அப்படத்தின் மூலம் நற்பெயர் பெற்ற அவர், இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ’மயிலு’ என்ற கதாபாத்திரம், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டி எங்கும் கொடிகட்டிப் பறந்தது.
இந்தியில் ஸ்ரீதேவி
இப்படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாரதிராஜா, ஸ்ரீ தேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்துவைத்தார். அப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாகக் கோலோச்சத் தொடங்கினார். இந்தியில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தார்.