தமிழில் 'உதயன்', 'மாசு', 'சகுனி', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் பிரணிதா சுபாஷ். இவர் தற்போது இந்தியில், 'பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா', 'ஹங்கமா 2' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு பிரணிதா, தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இந்த நிலையில், பிரணிதா சுபாஷ் நேற்று (மே 30) தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமண விழாவில் பிரணிதா - நிதின் ராஜூவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். கரோனா அச்சுறுத்தல் குறைந்த பின்பு திருமண வரவேற்பு நடத்த இருப்பதாக திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரிணிதா தனது சமூகவலைதளப்பக்கத்தில், "கரோனா தடுப்பு விதிமுறைகளால் திருமணத்துக்கு ஒருநாள் முன்பு வரை எப்போது திருமணம் நடக்கும் என தெரியாமல் இருந்தது. தற்போதைய சூழல் காரணமாக திருமண தேதியை அறிவிக்கமுடியவில்லை. இதனால் பலரையும் அழைக்க முடியாமல் போனது. இதற்காக மன்னிப்பு கோருகிறேன்" என பதிவிட்டுள்ளார். இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரணிதா - நிதின் ராஜூ தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், நெட்டிசன்கள் என பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.