ஹைதராபாத்: வன மேம்பாட்டுப் பணிகளுக்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் டண்டிகா அருகிலுள்ள காஜிபள்ளி வனப்பகுதியை நடிகர் பிரபாஸ் தத்தெடுத்துள்ளார். சுமார் ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி வன அலுவர்களிடம் வழங்கினார்.
'பசுமை இந்தியா சவால்' திட்டத்தின்கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு நடிகர் பிரபாஸின் தந்தை, யூ.வி.எஸ். ராஜு பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் நடிகர் பிரபாஸ் அடிக்கல் நட்டார். பின்னர் வனப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் பகுதியை பார்வையிட்டார்.
இந்த வன மேம்பாட்டு பணி குறித்து நடிகர் பிரபாஸ், "எனது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள், இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்க உத்வேகம் அளித்தது. வரும் காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணை முறையில் அளிப்பேன்" என்றார்.