சென்னை: நிர்பயா வழக்கில் நீதி கிடைத்திருப்பதுபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எப்போது நீதி கிடைக்கும் என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் குற்றவாளிகளான முகேஷ், வினய், அக்ஷய், பவன் என நான்கு பேர் டெல்லியிலுள்ள திகார் சிறையில் இன்று (மார்ச் 20) அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.
இதையடுத்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதன்படி #NirbhayaCase, #NirbhayaVerdict, #JusticeForNirbhaya போன்ற ஹேஷ்டாக்குகளுடன் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில்,
"இறுதியாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா வழக்கில் நீதி கிடைத்துள்ளது. இதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எப்போது நீதி கிடைக்கும் என வியப்புடன் காத்திருக்கிறேன். ஏற்கனவே இந்த வழக்கில் ஓராண்டு முடிந்துவிட்டது.
நாம் இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்காமல், எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த இரு நாள்களுக்கு முன் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொண்டு, விழிப்புடன் இருப்பது பற்றி கருத்து தெரிவித்தார் நடிகர் கார்த்தி.
தற்போது நிர்பயா வழக்கில் நீதி கிடைத்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையும் விரைவில் முடிந்து நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:'பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு சுகாதாரத்தைக் கடைப்பிடியுங்கள்' - நடிகர் கார்த்தி வேண்டுகோள்