சூரியன் திரைப்படம் 1992 ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், இப்படத்தை இயக்குநர் பவித்ரன் எழுதி இயக்கினார். சரத்குமார், ரோஜா, கவுண்டமணி, ஆச்சி மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் ஷங்கர், இப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்பற்று, அர்ப்பணிப்பு உணர்வினைக் கொண்ட பிரதமரின் தலைமைப் பாதுகாப்பு அலுவலரின் கதையை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கும் திரைப்படம் இது.
கதைக்களம்
இந்தப் படத்தில், பெங்களூருவில் நடைபெறும் விழா ஒன்றில் பிரதமரைப் படுகொலை செய்வதற்காக, கதாநாயகன் சூரியனிடம் (சரத்குமார்) உள் துறை அமைச்சராக வருபவர் பேரம் பேசுகிறார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து சரத்குமார் அமைச்சரை கொலை செய்துவிடுகிறார். உண்மை தெரியாமல் அவரை காவலர்கள் கைதுசெய்ய தேடுகிறார்கள். அங்கிருந்து தப்பி கோயம்புத்தூர் டாப்சிலிப் செல்கிறார் சூரியன். அங்கு அவருக்கு செட்டியார் அம்மாவின் (மனோரமா) உதவி கிடைக்கிறது.
இந்த வேளையில் மனோரமா, ஊரில் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்ளும் ராமசாமியிடம் (கவுண்டமணி) சூரியனுக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுக்குமாறு உதவி கோருகிறார். கவுண்டமணியும், கூப்பு கோனார் (ராஜன் தேவ்) என்னும் முக்கியப் பிரமுகரின் ஒரே மகளான உஷாவின் (ரோஜா) கார் ஓட்டுநர் பணியை வாங்கிக் கொடுக்கிறார்.
சூரியனின் உண்மை கதையை ரோஜா கண்டுபிடித்துவிடுகிறார். அதனால் சரத்குமார், அவரிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.