மும்பை: ஊடகம் மற்றும் கேளிக்கை துறையினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த 16 பக்கங்களுடன் கூடிய வழிகாட்டுதலை மத்திய கலாசார விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு இடையே படப்பிடிப்பு உள்ளிட்ட இதர காட்சி ஊடகம், திரைப்பட துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 16 பக்கங்களுடன் கூடிய வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் கலாசார விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
கரோனா பாதிப்பு ஏற்படாத வண்ணம் அலுவலகம், கூடாரங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு குழுவினர்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதுடன், அரசு வெளியிட்ட விதிமுறைக்கு உட்பட்டு முற்றிலும் பூட்டப்பட்ட அறைகளில் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
படப்பிடிப்புக்கு தேவையான அளவு குறுகிய குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனையும் தளத்தில் மேற்கொண்டு, படப்பிடிப்பு கருவிகளை கையாளுவதற்கு உரிய வழிகாட்டுதல்களுடன் முகக்கவசம், கையுறை போன்றவை தேவைப்படும்பட்சத்தில் வழங்க வேண்டும்.
ஒளி-ஒலி, சிகையலங்காரம், மின்சாரம், உணவு உள்பட அனைத்து துறை பணியாளர்களுக்கும் தேவையான நெறிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும். அவ்வப்போது அவர்களின் உடல் வெப்பம், சுவாச பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் கை கழுவுதல், சுகாதாரமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான கூடாரங்கள் அமைத்து, அதில் ஐந்து நபர்களுக்கு மேல் இல்லாதவாறு பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சீரான காற்றோட்டம் மிக்க இடங்களில் படப்பிடிப்பை நடத்தவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பேப்பர் பிளேட், கப்களை பயன்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
லைட் ஸ்விட்ச், ரிமோட் ஸ்விட்ச் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு பிறகு, அதன் மீது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
33 சதவீதம் பணியாளர்கள் மட்டும் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர பணிகளில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் பங்கேற்க வேண்டும். ஆரோக்ய சேது செயலியை நிறுவி உடல்நிலை குறித்த நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். தகுந்த இடைவெளியை உறுதிபடுத்தும் விதமாக கட்டங்கள் வரையப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், மருத்துவ பணியாளர்கள், பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.