பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக தற்போது பேசப்பட்டுவருவது நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்துதான். அவர் தற்கொலை செய்துகொண்டார் என ஒரு சாராரும், அவர் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என மற்றொரு சாராரும் தெரிவித்துவருகின்றனர்.
சுஷாந்த் மரணத்தை ஆரம்பத்திலிருந்தே மும்பை காவல் துறைதான் விசாரித்துவருகிறது. இந்நிலையில், சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், சுஷாந்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி மீது பிகார் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிகார் காவல் துறை சுஷாந்த் மரணம் குறித்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சுஷாந்த் பல சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக பிகார் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்த சிம் கார்டுகள் சுஷாந்தின் பெயரில் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.