சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா உள்பட எட்டு பேரை காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (NBC) பிடித்து விசாரித்தனர்.
நீதிமன்ற காவலுக்கு அனுமதி
இவர்கள் கைதுசெய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரையும் அக்டோபர் 7ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்து என்.சி.பி. விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
நேற்று (அக். 7) பிணை வழங்கக்கோரி ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து மேலும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஷாருக் கானை பாலிவுட் பிரபலங்கள் பலர் மும்பை பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தும் சமூக வலைதளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ஆர்யன் கானுக்கு ஆதரவாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
எச்சரிக்கையுடன் இரு
அதில் ஹிருத்திக் ரோஷன் கூறியிருப்பதாவது, "என் இனிய ஆர்யன் கான், வாழ்க்கை என்னும் பயணம் விநோதமானது; அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக இருக்கிறது. நம்மிடம் அது பிரச்சினைகளை வீசுவதால்தான் உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களைத் தருவார்.
இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை போன்றவை உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவரத் தேவையான விஷயங்கள்.
ஆனால் அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு போன்ற நல்லவற்றையும்கூட எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. போதுமான அளவு உனக்குள் கொளுந்துவிட்டு எரியட்டும்.