ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், இணையவாசிகள் பலரும் கேள்வியெழுப்பத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் கையெடுத்துக் கும்பிடுவது போன்ற எமோஜியை மட்டும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமிதாப் பச்சனின் ட்வீட் பதிவைக் கண்ட பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் பதிவிட்டுவருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சமயத்தில்கூட தங்களால் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்க இயலாதா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.