தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2022, 7:47 PM IST

ETV Bharat / premium

'கூட்டணி கட்சிகள் பங்கேற்பது தான் அனைத்து கட்சி கூட்டமா?' - அண்ணாமலை விளாசல்!

திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளை வைத்து கூட்டம் நடத்திவிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் என திமுக நாடகமாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Etv Bharatதிமுக கூட்டணி கட்சிகள் மட்டும் பங்கேற்பத்து அனைத்து கட்சிக் கூட்டமா? - அண்ணாமலை
Etv Bharatதிமுக கூட்டணி கட்சிகள் மட்டும் பங்கேற்பத்து அனைத்து கட்சிக் கூட்டமா? - அண்ணாமலை

சென்னை:தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை கமலாலயத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது"கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டிற்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வந்தது ஊக்கம் தருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது பிரதமருக்கு நேற்று (நவ-11)தமிழ் மக்கள் வரவேற்பு அளித்தனர். பிரதமர் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் தனது காரில் நின்றபடி தொண்டர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் கையசைத்து சென்றார். தமிழ்நாடு மக்களின் அன்புக்கு பாத்திரமாக பிரதமர் இருக்கிறார்.

மேலும், காசி தமிழ் சங்கம் குறித்து பிரதமர் நேற்று பேசினார். தமிழ்நாட்டில் இருந்து 2400 நபர்கள் 12 ரயிலில் இதில் பங்கேற்க காசி பயணம் செய்கின்றனர். முதல் குழுவை வாரணாசியில் 19ஆம் தேதி வரவேற்க வருவேன் என பிரதமர் கூறினார். உலகின் தொன்மையான மொழி தமிழ், அதை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை மட்டுமல்ல, இந்தியாவின் கடமை. தமிழ்நாட்டில் மருத்துவ, பொறியியல் கல்லூரியில் முழுமையாக தமிழில் பாடங்களை சொல்லித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான கருத்துகளை அமித்ஷா இன்று கூறினார்.

2010-ல் பொறியியல் கல்வி தமிழில் கொண்டு வரப்பட்டு, 1350 பொறியியல் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் 50 மாணவர்களே தமிழில் இந்த ஆண்டு பொறியியல் பயில்கின்றனர். தாய்மொழியே பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் விருப்பம் எனத் தெரிவித்தார்.

பாஜகவில் இணைய காத்திருக்கின்றனர்:முக்கியமான தலைவர்கள் பலர் பாஜகவில் இணைய காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் வரும்போது அவர்களை சேர்த்து கொள்வோம். பிரதமருடன் ஒரு மணி நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. கட்சி வளர்ச்சி குறித்து பேசினாம். தேர்தல், கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சரிடம் பொன் .ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார். அவற்றை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக முதலமைச்சருக்கு நேற்று நான் நன்றி கூறினேன்.

பாஜக மீது பொய்வழக்கு:பாஜகவினர் மீது தமிழகத்தில் போடப்படும் பொய் வழக்கு பற்றி விவரமாக அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா அவற்றை கவனித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜோக், ராஜிவ் கொலை குறித்த தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு. திமுகவின் B team ஆக தமிழக காங்கிரஸ் செயல்படுகிறது.

திமுக சீட் கொடுக்காமல் தங்களை மிரட்டுவதாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறிவிடலாம். முதலியார், செட்டியார், இஸ்லாமியர் உட்பட 70 சமூகங்கள் முற்பட்ட பிரிவில் இருக்கிறது. ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டுமானது என்று திமுக கண்ணை மூடிக்கொண்டு கூறி வருகிறது.

திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4,5 கூட்டணி கட்சிகளை வைத்து கூட்டம் நடத்திவிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் என திமுக கூறுவது நாடகம், வேடிக்கையாக இருக்கிறது. கோவை கார் குண்டு தாக்குதல் குறித்து சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களிடம் கேட்டறிந்தார் அமித்ஷா. மத சாயம் பூசாமல் மக்கள் பிரச்சனையாக பாஜக அதை முன்னெடுத்ததையும், திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது குறித்தும் கூறினோம். தமிழ்நாட்டில் என்ஐஏவை பலப்படுத்த வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்(நவ-11) நேற்று சந்தித்தனர். கட்சியுடன் தான் எங்கள் கூட்டணி, கட்சியில் தலைவர்கள் மாறத்தான் செய்வர். தலைவர்கள் யார் என்பதை கட்சியின் தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள். அதிமுகவில் செயற்குழு, பொதுக்குழுவில் தொண்டர்கள் இணைந்துதான் அக்கட்சியில் தலைவர்களை தேர்ந்தெடுத்தனர். தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் எங்களது தேசிய தலைமையின் வழிகாட்டுதல்படி நாடாளுமன்ற குழு கூட்டணி வைக்குமாறு கூறும். கட்சியின் மாநிலத் தலைவராக எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இருக்காது. கட்சி வளர்ச்சியை பாருங்கள் என்பதுதான் எப்போதும் அமித்ஷாவின் கருத்து" என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மீது மோடிக்கு தனிக்கவனம்! - சென்னையில் பேசிய அமித்ஷா

ABOUT THE AUTHOR

...view details