தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2020, 1:44 PM IST

ETV Bharat / opinion

பதற்றங்களைக் குறைக்க இந்திய – சீன பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது  - அமெரிக்கா!

இந்திய -பசிபிக் பிராந்திய நாடுகள் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை அளிக்கின்றன, அத்துடன் இந்த பிராந்தியத்தில் தான் 6 அணுசக்தி நாடுகளும், உலகின் சிறந்த ராணுவ கட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் 7வது இடத்தில் உள்ள நாடும் இருக்கிறது. அதனால் சீனாவுக்கு எதிர்ப்பு என்பது பலமாகவே உள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா

சீனா ’சாதூர்யமாக விதிகளை உடைக்கும்’ வேலையில் ஈடுபடுகிறது, சிறிய நாடுகள் மீது பொருளாதார நெருக்கடிகளைக் கொடுப்பதுடன், இந்த பேரிடர் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற நினைக்கிறது என்று, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் கடுமையாக சாடியுள்ளார். ஹவாய் தலைநகர் ஹோனோலுலுவில் நடந்த DKIAPCSS (டேனியல் கே ஐனோயூ – பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையம்) மையத்தின் 25வது ஆண்டுவிழா காணொளிக் காட்சி மூலம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டாக்டர்.மார்க் டி எஸ்பெர், சீனா குறித்து பரபரபப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். DKI-APCSS மையமானது, இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்கும், சர்வதேச போர்த்திறம் சார்ந்த விவகாரங்களுக்காகவும் கடந்த 1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழாவில் ‘மேம்பட்ட மற்றும் சுதந்திரமான இந்திய – பசிபிக்’ என்ற தலைப்பில் பேசிய எஸ்பெர், “நம்மிடம் உள்ள அதிநவீன கூட்டிணைவுக்கான வழிமுறைகளின் மூலம், சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்துவோரைத் தடுக்க முடியும். சீனா தங்கள் சுய லாபத்திற்காக விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வளைப்பதோடு, மற்றவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.” என்று சாடியுள்ளார்.

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு போர்த்திற விதிமுறைகளின் படி, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 50 சதவீத பாடத்திட்டத்தில் சீனாவை மையப்படுத்துமாறும், சீன மக்கள் குடியரசை ’அச்சுறுத்தல்’ என்று நமது பள்ளிகள், திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் சேர்க்குமாறு உத்தவிடப்பட்டுள்ளதாக, டாக்டர்.எஸ்பெர் கூறியுள்ளார்.

“சீன கம்யூனிச கட்சியின் தலைமையில் இயங்கும் அந்நாட்டு அரசு, தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டனர். முதலில் சர்வதேச விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அல்லது சட்டங்களை காற்றில் பறக்க விட்டு, சர்வதேச அமைப்புகளையும், சந்தைகளையும் தங்கள் நலனுக்கு வளைத்துக் கொண்டுள்ளனர். இரண்டாவதாக, ஹாங்காங்கின் சுயாட்சியை காப்பது மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தொடராமல் இருப்பது உள்பட, சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை தூக்கி எறிந்துள்ளனர்,” என்று காட்டமாக டாக்டர். எஸ்பெர் தெரிவித்துள்ளார். “சீனாவின் இந்த சுயநல நடவடிக்கை இந்திய – பசிபிக் பிராந்தியத்தோடு நின்றுவிடவில்லை.

உலகம் முழுவதும் எங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகும் கூட்டிணைவு நாடுகளிலும் சீன அரசு தங்கள் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறியுள்ளது. அத்துடன் பொருளாதார அழுத்தம் தருதல் உள்பட தீங்கு விளைவித்து பல்வேறு அளவுகளில் உள்ள நாடுகளை துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள ட்ரம்ப் அரசின் முக்கிய அமைச்சர், சீனாவின் ராணுவம் அந்நாட்டின் நலனுக்காக பணியாற்றவில்லை என்றும், மாறாக அந்நாட்டின் அரசியல் ஆதாயத்திற்காக பணியாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். “சீனாவின் மக்கள் ராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை பெருக்க உதவுவது போல் உள்ளது.

உலகளவில் நவீன ராணுவமாக பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ரகசியக் குறிக்கோளுடன், பல்வேறு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் மக்கள் ராணுவம் தைரியமாக தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளிலும், பல நாடுகளிலும் தங்கள் விருப்பம் போல ஆக்கிரமிப்புகளை மேற்கொள்கின்றனர்,” என்று பாதுகாப்பு செயலர் குற்றம் சாட்டுகிறார்.

இந்திய -பசிபிக் பிராந்திய நாடுகள் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை அளிக்கின்றன, அத்துடன் இந்த பிராந்தியத்தில் தான் 6 அணுசக்தி நாடுகளும், உலகின் சிறந்த ராணுவ கட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் 7வது இடத்தில் உள்ள நாடும் இருக்கிறது. அதனால் சீனாவுக்கு எதிர்ப்பு என்பது பலமாகவே உள்ளது. எனவே அமெரிக்காவுக்கும் கூட்டிணைவு நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமாக இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பெர், 21ம் நூற்றாண்டில் இந்தியாவுடனான நல்லுறவு எங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறியதில் சீனாவின் மோசமான நடத்தை வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது என்றார். “சீனாவுடனான பதட்டம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை செயலர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பலமுறை பேசியிருக்கிறேன்.

கரோனா வைரஸ் பேரிடர் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எல்லை தாண்டும் நடவடிக்கைகளை அரங்கேற்றியதன் மூலம் சீனாவின் மோசமான நடத்தையை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் இருதரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமான விஷயம். அதே நேரம் இந்தியாவுடனான நல்லுறவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்,” என்றார்.

இந்த சூழலில் அடுத்த சில வாரங்களில் இந்திய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

சிக்கலான நேரங்களில் கூட்டிணைவு நாடுகளுடன் முக்கிய ஆயுதங்களை பகிரும் நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில், அமெரிக்க எஃப்எம்எஸ் (வெளியுறவு ராணுவ விற்பனை) திட்டத்தில் மேம்பாடுகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று டாக்டர். எஸ்பெர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானுக்கு எஃப்35 ரக ஹெலிகாப்டர்கள், இந்தியாவுக்கு கடல் ரோந்து மற்றும் அபாச்சி ராணுவ விமானங்கள் மற்றும் தைவானுக்கு எஃப்16 போர் ஜெட் விமானங்கள் அளித்தது ஆகியவை இத்திட்டத்தின் சில உதாரணங்கள்.

“21ஆம் நூற்றாண்டுக்கான கூட்டு போர்த் திறங்களில் புதிய நுட்பங்களையும் மேம்பாடுகளையும் செய்துள்ளோம், இதன் மூலம் எங்கள் கூட்டிணைவு நாடுகள் யூகித்து துரிதமாக செயல்படும் விதத்திலும், எதிரிகள் யூகிக்க முடியாத போர்த்திறன்களையும் உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சிகள் யாவும் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோன்றும் போது எங்கள் ராணுவம் போரிடாமல், ஆனால் வெற்றி பெறும் நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள அமெரிக்கா, ‘தென் சீனக் கடல் பகுதியில் தீங்கு விளைவிக்கும் செயல்களால்’ இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர். எஸ்பெர், 5ஜி தொழில்நுட்பம் தொடர்பாக சீனாவுடன் தங்களது கூட்டிணைவு நாடுகள் வர்த்தகம் செய்யவேண்டாம் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். “தவறான நோக்கில், தொழில்நுட்ப ரீதியில் 5ஜி தொழில்நுட்பம் மூலமாக அதிக ஆபத்தை விளைவிக்கும் சீனாவின் செயலைப் புரிந்துகொண்ட அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டிணைவு நாடுகள், சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளன.

இதை ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஏற்கனவே செய்து விட்டன. எங்கள் கூட்டிணைவு நாடுகள் தங்களுக்கான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் அதி நவீன தொழில்நுட்பங்களை சீன பின்னணி கொண்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கி பயன்படுத்தும் போது அதீத கவனத்தோடு இருக்க வேண்டும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

இவை அனைத்திற்கும் மேலாக, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை தடுக்கும் பணிகளுக்கு சீனா இடையூறுகள் செய்வதாகவும், இது தொடர்பாக உலக சுகாதார மைத்திடம் வெளிப்படையாக இருக்கவில்லை என்றும் டாக்டர். எஸ்பெர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: குளர்காலத்திற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதா? பதிலளிக்கிறார் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா

ABOUT THE AUTHOR

...view details